பிரதமர் மோடியை சந்தித்த நாமல் ராஜபக்சே- பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி வெளியீடு!
குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் இலங்கை கேபினட் அமைச்சருமான நாமல் ராஜபக்சே சந்தித்தார். இச்சந்திப்பின் போது பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார்.
5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா பரபர ஆலோசனை!
புத்த மத யாத்திரை தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
நாமல் ராஜபக்சே, புத்த துறவிகள்
இந்நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் நாமல் ராஜபக்சே மற்றும் 100க்கும் மேற்பட்ட இலங்கை புத்த மத துறவினர்கள் பங்கேற்றனர். இவர்கள் வருகை தந்த இலங்கை விமானம்தான், குஷிநகருக்கு வந்த முதல் சர்வதேச விமானம்.
பகதவ் கீதை சிங்கள மொழிபெயர்ப்பு
மேலும் குஷ்நகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் 12 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை நாமல் ராஜபக்சே சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது பகவத் கீதையின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார்.
புத்தர் பரிநிர்வாணமடைந்த குஷிநகர்
இது தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் புத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு சென்ற விமானம் .தரையிறங்கியதன் மூலம் தொடங்கியது.
தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில்..
புராதான நகரமான குஷிநகர் புத்தரின் இறுதி ஓய்வு இடமாகும், அங்கு அவர் இறந்த பிறகு மகாபரிநிர்வாணம் அடைந்தார். இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 ஆண்டுகளாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வளர்க்கும் செயலாகும். பிரதமர், மகிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை என்னும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூல் பகவத்கீதை. அந்தப் பெருமைமிகு நூலினை இலங்கையில் வாழ்கின்ற இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த நூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.