தூதரக விதிமுறைகளை மதிக்காத பாகிஸ்தான்.. இந்திய தூதரர்களை திருப்பியனுப்புவதில் குறி
டெல்லி: தூதரக விதிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது பாகிஸ்தான். 8 அதிகாரிகளை திருப்பியனுப்ப நெருக்கடி கொடுத்துள்ளதன் மூலம், இரு நாட்டு உறவுக்குள்ளும் சிக்கலை உருவாக்கியுள்ளது அந்த நாடு.
இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான ஒப்பந்தப்படி, இரு நாடுகளும், தலா, 110 தூதர அதிகாரிகளை நியமித்துக்கொள்ள முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்த எண்ணிக்கை 50-ஆக குறைக்கப்பட்டது. இரு நாடுகள் நடுவே பதற்றம் தொடர்ந்ததால் இந்த எண்ணிக்கை 20-ஆக, மேலும் குறைக்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 18 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் தூதரக விதிமுறைகள் அனைத்தையும் உடைத்து எறிந்து இந்திய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்ப தொடங்கியுள்ளது. அதுவும் வெளிப்படையாகவே இது தெரிகிறது.
டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகபூப் அக்தர், உளவு புகாரை தொடர்ந்து திருப்பியனுப்பப்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு இந்திய அதிகாரிகளை திருப்பியனுப்பி வருகிறது பாகிஸ்தான். அதன் ஒரு பகுதிதான், 8 இந்திய அதிகாரிகளை உளவு புகாரின்பேரில் திருப்பியனுப்ப நெருக்கடி கொடுத்து வருகிறது பாகிஸ்தான். இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.