தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி... திருப்பதியில் பிரார்த்தனை செய்த நமீதா!
திருப்பதி: தனது பிறந்த நாளையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி கும்பிட்டார் நடிகை நமீதா.
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் அவர் வேண்டிக் கொண்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகையாவதற்கு முன்பு எப்படிக் கொண்டாடினாரோ... ஆனால் நடிகையான பிறகு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் தனது பிறந்த நாளை ஆதரவற்றோர், ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாடி வருகிறார் நடிகை நமீதா.
ஆதரவற்றோர் பள்ளிகள், விடுதிகள், இல்லங்களுக்குச் சென்று உணவு, உடை, பரிசுகள் வழங்கி தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார். ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறந்து வைத்தார்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாளை புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ ஹோமில் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். உணவுடன், அவர்களுக்கு தேவையான பரிசுப் பொருட்களையும் வழங்குகிறார்.
திருமலையில்...
அதற்கு முன் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார் நமீதா. நேற்று திருப்பதி சென்றவர், காலையில் தரிசனம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தார். நமீதா வருகை அறிந்ததும் மீடியாக்கள் குவிந்தன.
அவர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி தொடர வேண்டும். தமிழக மக்கள் எல்லா வளங்களும் பெற்று நிம்மதியாக இருக்க வேண்டும். இதுதான் எனது வேண்டுதல். அது சீக்கிரமே பலிக்கும்," என்றார்.
தரிசனம் முடிந்த கையோடு இன்று சென்னை திரும்பினார் நமீதா.