ஜெயலலிதாவின் 2 திட்டங்களை அப்படியே காப்பியடித்து அறிவித்த சித்தராமையா! சசிகலா சகவாசம் காரணமா?
சித்தராமையா பல கவர்ச்சி திட்டங்களை இன்றைய பட்ஜெட் உரையின்போது அறிவித்தார். அதில் இரு திட்டங்கள், பக்காவாக தமிழகத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வரின் மக்கள் மனம் கவர்ந்த சில திட்டங்களை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.
கர்நாடக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அடுத்த வருடம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக நல்ல வெற்றியை ஈட்டியுள்ளது.
தேர்தல் ஜுரம்
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வும் என்று பாஜக நடத்திய ஒரு ரகசிய சர்வேயில் அம்பலமாகியுள்ளது. பாஜக 160 தொகுதிகள் வரை வென்று அறுதி பெரும்பான்மையோடு 224 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்கும் என்கிறது அந்த சர்வே.
தேர்தல் பட்ஜெட்
உளவுத்துறை மூலம் இதையெல்லாம் அறிந்து வைத்துள்ள சித்தராமையா பல கவர்ச்சி திட்டங்களை இன்றைய பட்ஜெட் உரையின்போது அறிவித்தார். அதில் இரு திட்டங்கள், பக்காவாக தமிழகத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களாகும்.
நம்ம கேன்டீன்
தமிழகத்தில் அம்மா கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலையில் சாப்பாடு வழங்கப்படும் உணவகங்களை ஜெயலலிதா துவக்கினார். அதே பாணியில் சித்தராமையா ஒரு அறிவிப்பை வெளியிட்டார், "'நம்ம கேன்டீன்' என்ற பெயரில் பெங்களூரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்" என சித்தராமையா அறிவித்தார்.
குறைந்த செலவு
இந்த 'நம்ம கேன்டீன்'களில், காலை சிற்றுண்டி ரூ.5க்கும், மதிய சாப்பாடு ரூ.10க்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவகங்களை திறக்க தேவையான இடங்கள் தேர்வு செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் திறப்பு
பெங்களூரில் மொத்தம் 198 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளில் தலா ஒரு கேன்டீன் என்ற விகிதத்தில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று சித்தராமையா தனது உரையில் குறிப்பிட்டார். பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எனவே மொத்தமாக அந்த தொகுதிகளை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லேப்டாப்
இதேபோல மற்றொரு திட்டமும் ஜெயலலிதாவிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் எப்படி பள்ளி மாணாக்கர்களுக்கே லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தாரோ அதேபோல ஒரு திட்டம் சித்தராமையாவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு சலுகைகள்
கர்நாடகாவில் கல்லூரிகளில் இளநிலை படிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 12 காரிடார் சாலைகளை அமைக்க ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். மேலும் நகரில் 200 கோடி ரூபாய் செலவில் 200 கி.மீ தூரத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சகவாசம்
அதிமுக பொதுச்செயலாளரும், ஜெயலலிதா தோழியுமான சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்த நிலையில் சித்தராமையாவின் ஜெயலலிதா திட்டங்களின் காப்பியடித்த அறிவிப்புகளை பபார்த்து, சசிகலா சகவாச தோஷம்தான் இதற்கெல்லாம் காரணம் போலும் என்று கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.