சீட் பெல்ட் அணியாமல், அதிவேகத்தில் கார் ஓட்டிய என்.டி.ஆர் மகன் ஹரிகிருஷ்ணா.. பரபர தகவல்கள்
Recommended Video
ஹைதராபாத்: விபத்தில் பலியான, என்.டி.ஆர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, காரை ஓட்டியபோது சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை எத்தனை விழிப்புணர்வுகள் மூலம் சொன்னாலும், மக்கள் கேட்காமல் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை டொயோட்டோ நிறுவனத்தின், பார்ச்சூனர் கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதை ஓட்டிச் சென்ற ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார்.
சீட் பெல்ட் அணியவில்லை
கார் கவிழ்ந்த அதிர்வால், அதன் கதவுகள் திறந்துள்ளன. அப்போது வெளியே தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணா, பரிதாபமாக பலியானார். கார் சுமார் 150 கி.மீ வேகத்தில் சென்றபோது கவிழ்ந்ததாகவும், அப்போது ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியவில்லை என்றும், காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால், விபத்தின் பாதிப்பு குறைந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
அஜாக்கிரதை ஏன்
எஸ்யூவி வகை கார்கள் 150 கி.மீ வேகத்தில் செல்வது பெரிய விஷயம் இல்லை என்றபோதிலும், கார் கவிழ்ந்ததற்கு ஹரிகிருஷ்ணாவின் அஜாக்கிரதைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் பாட்டில்
இதுபற்றி மற்றொரு காவல்துறை அதிகாரி கூறுகையில், ஹரிகிருஷ்ணா 150 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. அப்போது தண்ணீர் பாட்டிலை எடுக்க முற்பட்டுள்ளார். சாலையில் சிறு வளைவு அப்போது வந்தது. கடைசி நிமிடத்தில் வளைவில் சரியாக திருப்ப முற்பட்டார். ஆனால், அந்த வேகத்தில் சென்றபோது, உடனடியாக அதை சரி செய்ய முடியவில்லை. எனவேதான், சாலை தடுப்பில் கார் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ரோடும் சரியில்லை
61 வயதான ஹரிகிருஷ்ணா, ஹைதராபாத்திலிருந்து, நெல்லூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு, கார் அதிவேகமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். விபத்து நடந்த சாலை இன்ஜினியரிங் குறைபாடு கொண்டது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.