ஆதார் அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலகேனி ராஜினாமா!
பெங்களூர்: ஆதார் அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நிலகேனி ராஜினாமா செய்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலகேனி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு விலகினார். அதன்பின், ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான, இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நந்தன் நிலகேனி கடந்த 9 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் கட்சி ‘சீட்' வழங்கியுள்ளது. நந்தன் நிலகேனி, பா.ஜ.க. சார்பில் 5 முறை எம்.பி.யாக பதவி வகித்த ஆனந்த குமாரை எதிர்த்து களமிறங்க உள்ளார்.
இதையடுத்து, இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி உள்ளார்.