காம்ப்ளி, மனைவியிடம் இருந்து தப்பிக்க பினாயிலை குடித்தேன்: பணிப்பெண் பரபரப்பு பேட்டி
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவியிடம் இருந்து தப்பிக்க பினாயிலை குடித்ததாக பணிப்பெண் சோனி தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா தங்கள் வீட்டு பணிப்பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக அவர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பணிப்பெண் சோனி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குழந்தைகள்
காம்ப்ளி தனது 2 குழந்தைகளை கவனித்துக் கொள்ள என்னை வேலைக்கு சேர்த்தார். மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் பேசப்பட்டது. ஆனால் நான் எப்பொழுது பணம் கேட்டாலும் ரூ. 500 முதல் ரூ.1000 வரை தான் அளிப்பார்கள்.
சம்பளம்
நான் கடந்த 2 ஆண்டுகளாக அவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தேன். அவர்கள் இதுவரை எனக்கு பேசியபடி முழு சம்பளத்தை அளித்ததே இல்லை. எப்பொழுது சம்பளம் கேட்டாலும் என்னை அடிப்பார்கள், வீட்டுக்கு போக விடாமல் செய்வார்கள்.
போன்
காம்ப்ளியும், அவரது மனைவியும் எனது செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். என்னை 10 நாட்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் இருந்தனர். வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறியதற்கு அவர்கள் இருவரும் என்னை அடித்தனர்.
அறை
என்னை அடித்ததோடு மட்டும் அல்லாமல் என்னை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டனர். மூன்று நாட்களாக என்னை அந்த அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
பினாயில்
அறையில் அடைத்து வைத்ததும் மனவேதனையில் நான் பினாயிலை குடித்துவிட்டேன். இப்பொழுது என்னை கொலை செய்யுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்தேன். பின்னர் ஒரு வழியாக அங்கிருந்து தப்பியோடி பாபா மருத்துவமனையில் சேர்ந்தேன்.
அடி, உதை
எதற்கெடுத்தாலும் என்னை அடித்து வந்தார்கள். ஒரு முறை காம்ப்ளி என்னிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று மது வாங்கி வருமாறு கூறினார். நான் மறுத்ததும் என்னை நடுத்தெருவில் வைத்து அடித்து நொறுக்கினார் என்றார் சோனி.
பயம்
எங்கே என் சகோதரி பினாயிலை குடித்த பிறகு அவர்கள் வீட்டிலேயே இறந்துவிடுவாரோ என்று பயந்து தான் காம்ப்ளியும், அவரது மனைவியும் அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர் என சோனியின் சகோதரி ஆயிஷா தெரிவித்துள்ளார்.
இல்லை
நாங்கள் சோனியை அடிக்கவில்லை. அவர் ஒழுங்காக வேலைக்கு வராமல் இருப்பதால் சம்பளத்தை முழுவதுமாக அளிக்கவில்லை. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது காரணம் சொல்லி பணம் கேட்பார். எங்கள் வீட்டில் சிசிடிவி கேமரா உள்ளது. வேண்டும் என்றால் அதை பரிசோதனை செய்யுங்கள். அப்பொழுது தெரியும் நாங்கள் அவரை தாக்கவில்லை என்று என காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா கூறியுள்ளார்.