பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி... சந்திரபாபு நாயுடு மகன் மீது புதிய புகார்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி வைத்துவிட்டு சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த லோகேஷ், துறை சார்ந்த கூட்டங்களுக்காக விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரியிலிருந்து ஸ்நாக்ஸ் வாங்கியதாக தெரிகிறது.
இதனிடையே தனது துறை சார்ந்த கூட்டங்களுக்காக வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் பொருட்களுக்காக ரூ. 15 லட்சம் வரை அவர் பாக்கி வைத்துள்ளதாக இப்போது கூறப்படுகிறது.
முரசொலியை இருக்கட்டும்.. தமிழகத்தில் 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா? திருமாவளவன்
ஐ.டி. அமைச்சர்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அம்மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் நர லோகேஷ். இவர் துறை சார்ந்த கூட்டங்களின் போது அதிகாரிகளுக்கு அளிக்கவும், தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காகவும் விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரி கடை ஒன்றில் ஸ்நாக்ஸ் வாங்கியுள்ளார்.
ரூ.15 பாக்கி
5 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்றும், அதற்கான தொகையை முந்தைய தெலுங்கு தேசம் அரசு கொடுக்காமலேயே இழுத்தடித்து வந்திருப்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுத் துறைகளுக்கான செலவுத்தொகை குறித்து கணக்கெடுத்த போது இந்த விவகாரமும் ஜெகன் கையில் சிக்கியுள்ளது.
நிலுவைத் திட்டங்கள்
மேலும், ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது எந்தெந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் இப்போது கண்டறியப்பட்டு வருகிறது. இதனிடையே பேக்கரி விவகாரத்தை வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நர லோகேஷை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
கோபம்
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீதான பழிவாங்கும் செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கில் ஜெகன் செயல்படுகிறார் எனவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகின்றனர்.