நாரதா லஞ்ச வழக்கு.. திரிணாமுல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட.. ஜாமீனை ரத்து செய்த கொல்கத்தா ஹைகோர்ட்
கொல்கத்தா: நாரதா லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு திரிணாமுல் தலைவர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமீனை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக நாரதா என்ற செய்தி இணையதளம் செய்திகளை வெளியிட்டிருந்தது.
கொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி
இது தொடர்பான வீடியோக்கள் 2016ஆம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரணை செய்து வருகிறது.
திடீர் கைது
இந்நிலையில், நேற்று காலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கு வங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிபிஐ நீதிமன்றம் ஜாமீன்
கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், நேற்று மாலை காணொலி காட்சி மூலம் விசாரணை செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கொல்கத்தா ஹைகோர்ட் ரத்து
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நான்கு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமை நடைபெறும் நிலையில், அதுவரை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி
முன்னதாக, அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக சிபிஐ அலுவலகத்திற்கே சென்றார். அங்கு அமைச்சர்களுடன் சேர்த்து தம்மையும் கைது செய்து பாருங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.