தெலுங்கானா பள்ளிகளில் பாடமாகும் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு பாடமாக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. பி. வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் 94வது பிறந்தாள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசிம்ம ராவின் சிலைக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. பி. வினோத் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் கரீம்நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு பாடமாக்கப்படும். பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர் நரசிம்ம ராவ். அத்தகையவரை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை. விரைவில் கரீம்நகரில் நரசிம்ம ராவுக்கு சிலை வைக்கப்படும் என்றார்.
நரசிம்ம ராவ் கடந்த 1921ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.