கள்ளநோட்டை அடுத்து போதைப் பொருளை கொடுத்து இந்தியாவை சீரழிக்க பார்க்கிறதா பாக்.?
அகமதாபாத்: குஜராத் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் படகில் இருந்து ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்குள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் போதைப் பொருளை ஆயுதமாக கையில் எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற படகை இந்திய கடலோர காவற்படையினர் மடக்கிப் பிடித்தனர். குஜராத் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்த படகில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் இருந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கடலோர காவற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாகிஸ்தானில் இருந்து வந்த படகில் இருந்து 232 பாக்கெட்டுகளில் இருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளோம். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
படகில் 8 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். படகில் 8க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் ஐ.ஜே.சிங் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் மூலமாகவும் பாகிஸ்தான் நம் நாட்டுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் படகில் இருந்த போதைப் பொருளை பார்க்கையில் இந்தியர்களை கெடுக்க நம் அண்டை நாடு புதிய திட்டத்தை போட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.