"தாய்" சொல்லை தட்டலாமா தமிழிசை அவர்களே?
Recommended Video
டெல்லி: பாஜக அரசு விமர்சிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பிரதமரே கருத்து தெரிவித்துள்ள நிலையில் தூத்துக்குடி விமானத்தில் அரசை விமர்சனம் செய்த சோபியா, தமிழிசையின் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டது முரண்பாடாக உள்ளது.
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார். அப்போது பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சோபியா கோஷம் போட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவருக்கும், தமிழிசைக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. விமானம் தரையிறங்கிய பிறகும் சண்டை நீடித்தது. பின்னர் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
பரபரப்பு
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் புகார் பேச்சுரிமை, ஜனநாயகம் இவற்றை நசுக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
|
விமர்சனங்கள்
இந்நிலையில் மோடி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் இந்த அரசு விமர்சிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம், விமர்சனங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடாகவே...
ஒரு அரசை விமர்சித்தால்தான் ஜனநாயகம் வலுப்படும் என்று பிரதமரே கூறியுள்ள நிலையில் அரசை விமர்சித்த குற்றத்துக்காக பொது இடத்தில் தமிழிசை சண்டையிட்டதும், போலீஸில் புகார் அளித்ததும் முரண்பாடாகவே உள்ளது.
வெட்ட வெளிச்சமாக...
பொதுவாக பொன் ராதாகிருஷ்ணனின் கருத்துகளில் இருந்துதான் தமிழிசை மாறுபடுவார். ஆனால் தற்போது "இந்த நாட்டுக்கே அம்மா"வான மோடியின் கருத்துக்கே மாறுபட்ட கருத்தை தமிழிசை கொண்டுள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
தமிழிசை
தங்கள் அரசு விமர்சிக்கப்பட வேண்டும் என்று மோடி கூறுவது சரியா, இல்லை, அரசை விமர்சிக்கவே கூடாது என்று கருதும் தமிழிசையின் மனநிலை சரியா என்பதை பாஜகவினர்தான் விளக்க வேண்டும்.