"பிரதமராக" முதல் முறையாக குஜராத் சென்றார் நரேந்திர மோடி! உற்சாக வரவேற்பு!!
அகமதாபாத்: நாட்டின் பிரதமரான பின்னர் முதல் முறையாக குஜராத் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். கடந்த மே மாதம் பிரதமராக பதவியேற்ற பிறகு, அவர் முதல் முறையாக இன்று பிற்பகல் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
அவருடன் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவும் சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் நரேந்திர மோடியை குஜராத் முதல்வர் ஆனந்த்பென் படேல், மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர் அகமதாபாத்தில் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அவர், ஆதரவு அளித்த அகமதபாத் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் நாடு புதிய வளர்ச்சியை எட்டும் என்றும் முதல் அமைச்சராக நான் பணியாற்றிய அனுபவம் எனக்கு நாட்டை ஆட்சி செய்ய உதவியாக இருந்தது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான நாளை அகமதாபாத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.