செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்வர்கள் குழு அமைக்கிறது மத்திய அரசு
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து ஆலோசனை தருவதற்கு முதல்வர்கள் குழுவை அமைக்கிறது மத்திய அரசு
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 5 முதல்வர்கள் கொண்ட குழுமை மத்திய அரசு அமைக்கிறது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நேற்று ஆலோசனை நடத்தினார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணப் புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 3 வாரங்கள் ஆனபோதும் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டே இருக்கின்றன. திறந்திருக்கும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்கள் முன்பும் மக்கள் நீண்ட வரிசையில் நாள்தோறும் காத்திருக்கும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இப் பிரச்சனையை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தார்.
இந்த முதல்வர்கள் குழுவுக்கு சந்திரபாபு நாயுடுவை தலைமை ஏற்குமாறும் ஜேட்லி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.