28ம்தேதி முதல் அனைவர் கைகளிலும் வங்கி பாஸ்புக்! திட்டத்தை துவக்குகிறார் மோடி!!
டெல்லி: அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை 28ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தான் யோஜனா' என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு இந்த திட்டம் வகை செய்கிறது.
28ல் துவக்கம்
இத்திட்டத்தை 28ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதே நாளில் இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்படும்.
மாநில, மாவட்ட அளவில்..
மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்கள். மேலும், அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.
ஆதார் அட்டை போதும்
இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்' அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
காப்பீடு கிடைக்கும்
ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இ-மெயில்
இந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இ-மெயில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் "நாடு முழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருத வேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்க வேண்டும்.
வளர்ச்சிக்கு தேவை வங்கி கணக்கு
இன்னும் பலருக்கு வங்கி கணக்கு இல்லாததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசர பணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.
கந்து வட்டியிலிருந்து தப்பிக்கலாம்
வங்கி கணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்த மக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.