நவ. 8ம் தேதிக்குப் பிறகு செய்த டெபாசிட்டுகளுக்கு புதிய வருமான வரி விகிதம்!
டெல்லி: நவம்பர் 8ம் தேதி பிறகு செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு புதிய விகிதத்தில் வருமானவரி திருத்தும் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக ரூ.2 ஆயிரம், புதிய 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது கிடைக்கிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நவம்பர் 8ம் தேதி பிறகு செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு புதிய விகிதத்தில் வருமானவரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விகிதத்தில் வருமானவரி விதிப்பதற்கு வகை செய்ய சட்டத்தில் திருத்தும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு சரியான கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 8 ம் தேதிக்கு பிறகு வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.