4 வருடங்களை நிறைவு செய்யும் மோடி அரசு சாதித்தது என்ன?
டெல்லி: மே 26ம் தேதியுடன் நரேந்திர மோடி அரசு 4 வருடங்களை பூர்த்தி செய்கிறது.
ஊழலற்ற நிர்வாகம், வருடத்திற்கு 10 மில்லியன் வேலை வாய்ப்பு என்றெல்லாம், வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி சர்க்கார், 4 வருடங்களை நாளை பூர்த்தி செய்கிறது.
பாஜகவினரால் சாதனை நாயகன் என பிம்பிக்கப்படும் மோடியின் அரசு, 4 ஆண்டுகளில் அப்படி என்னதான் சாதனை செய்தது? அதையும் தான் பார்த்துவிடலாமே.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
10 வருடங்களாக ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கடந்த வருடம் 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பை மோடி அரசு அமல்படுத்தியது. முதல் சில மாதங்கள் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தன. ஆனால், அது திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஜிஎஸ்டி வரி நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மறைமுக வரிகளில் பெரும் சீர்திருத்தம் இதனால் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கொள்கை
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 53 நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு உறவில் இந்தியா மேம்பட்டுள்ளது. சீனா போன்ற வல்லரசு நாடுகளை டோக்லாமில் நேருக்கு நேர் இந்தியா எதிர்கொண்டதோடு, சீனாவின் முயற்சிகளை முறியடித்தது. அதேநேரம், பாகிஸ்தானுடனான உறவில் மேம்பாடு இல்லை. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என பாக். எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியபோதிலும், பிறகும், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் நின்றபாடில்லை. ஆயினும் தக்க பதிலடியை இந்தியாவும் கொடுத்து வருகிறது.
பொருளாதார குற்றவாளிகள் சட்டம்
விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றதால் கடும் விமர்சனங்களை சந்தித்த மோடி அரசு, அதற்கு பரிகாரமாக கொண்டு வந்ததுதான் The Economic Offenders Bill சட்டம். ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, இந்த சட்டம் வகை செய்கிறது.
பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை
மோடி அரசு வந்த பிறகு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வெளியானதை போல ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி காலகட்டத்தில், எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து பல ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டன. ஆனால், மோடி அரசுக்கு எதிராக அதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன் வைக்கவில்லை.