ஸ்ரீசாந்த் கல்யாணத்தில் மோடி... வெறும் வதந்தியாம்!
முன்னதாக நேற்று ஸ்ரீசாந்த்தின் திருமணத்தில் மோடி பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தனை ஏடுகளும் இதை செய்தியாக்கியிருந்தன. ஆனால் உண்மையில் ஸ்ரீசாந்த்துக்கு இன்று திருமணம் நடக்கும் விஷயமே மோடிக்குத் தெரியாது என்று இப்போது செய்திகள் வந்துள்ளன.
கொச்சியில் ஸ்ரீசாந்த்துக்கும், அவரது காதலியான ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண் புவனேஸ்வரி குமாரிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
நகை வடிவமைப்பு டிசைனராக இருக்கிறாரர் புவனேஸ்வரி குமாரி. கடந்த 2006ம் ஆண்டு முதல் இவரும், ஸ்ரீசாந்த்தும் காதலித்து வருகின்றனர். ஸ்ரீசாந்த், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி சிறைக்குச் சென்றபோது அவருக்கு பெரும் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்தார் புவனேஸ்வரி. இதையடுத்து இவர்களது திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
இன்று குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக டிசம்பர் 8ம் தேதியே புவனேஸ்வரி குடும்பத்தினர் கேரளாவுக்கு வந்து சேர்ந்து விட்டனர். நிச்சயதார்த்தமும் நடந்தது. நேற்று சங்கீத் உற்சவம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் எர்ணாகுளம், கோத்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீசாந்த்தின் பூர்வீக வீட்டுக்கு புதுமணத் தம்பதியினர் செல்வார்கள். அதன் பின்னர் மாலையில் கொச்சியில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளார் என்பது
நினைவிருக்கலாம்.
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய 2வது கேரள வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.