டெல்லியில் மோடிக்கு உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தலைவர்கள் வாழ்த்து!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் வரும் 20-ந் தேதி முறைப்படி பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை அவர் குஜராத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்தடைந்தார் . டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடியை வரவேற்க பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் மோடியை உற்சாகமாக வரவேற்ற பாரதிய ஜனதாவினர் அங்கிருந்து மோடியின் வாகனத்தைப் பின் தொடர்ந்து ஊர்வலமாக பாஜக தலைமையகம் நோக்கி சென்றனர்.
வழியெங்கும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகளை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். சில இடங்களில் தமது வாகனத்தை மெதுவாக நிறுத்தி வெளியே வந்து பொதுமக்களின் வாழ்த்தையும் மோடி ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற குழுக் கூட்டம்
இந்த வாகன ஊர்வலம் செல்லும் வழியெங்கும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வெற்றி ஊர்வலம் பாஜக தலைமையகத்தை சென்றடைந்த பின்னர் நாடாளுமன்ற குழுக் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி. பின்னர் மோடிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பரிமாறினார்.
அதேபோல் அத்வானியை வணங்கி ஆசீர்வாதம் பெற்றார் நரேந்திர மோடி. மேலும் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது:
20-ந் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
பாரதிய ஜனதா கட்சி மீதான மக்கள் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.
நரேந்திர மோடியின் தீவிர பிரசாரத்துக்கு இன்றைய கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் எந்த ஒரு கட்சியும் காங்கிரசை எதிர்த்து இத்தகைய பெரும்பான்மையைப் பெற்றது இல்லை.
வரும் 20-ந் தேதி பாரதிய ஜனதா எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மோடி பிரதமராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். மோடி பிரதமராக பதவி ஏற்பது எப்போது என்று 20-ந் தேதி முடிவு செய்வோம்.
குஜராத் மாநில புதிய முதல்வர் அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார். அதே போல் சீமாந்திரா, தெலுங்கானா, ஒடிஷா மாநில சட்டசபைகளில் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மேலிடப் பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
மோடி நன்றி
அதன் பின்னர் பேசிய நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.