படேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: மோடி
அகமதாபாத்: சர்தார் படேல் பிரதமராயிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் ஜவஹர்லால் நேருவை மறைமுகாக குறிப்பிட்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசினார்.
நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அம்மாநில முதல்வரும் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய மோடி நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் வந்திருக்க வேண்டும் என இந்தியாவின் முதல் பிரதமரான காங்கிரச் கட்சியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பற்றி மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
மேலும், விழாவில் அவர் பேசியதாவது...
இரும்பு மனிதர்....
நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், சுதந்திரம் அடைந்தபோது சிதறுண்டு கிடந்த சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார். ஆனால், அந்த ஒற்றுமையும், தேசப்பற்றும் இன்று தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் ஆகியவற்றால் மிரட்டப்பட்டு வருகிறது.
இந்தியர்களின் வருத்தம்...
சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்னும் வருந்துகின்றனர். ஆனால், அவர் அன்று மட்டும் பிரதமராக ஆகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருந்து இருக்கும்.
தவறான வழியில் இளைஞர்கள்....
தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள் அவர்களுடைய சொந்த சமுதாயங்களுக்கே மிகப்பெரும் தீங்கை இழைத்து வருகின்றனர். மேலும் நாட்டில் வன்முறையை அரங்கேற்ற இளைஞர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாகவும் அவர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர்.
வன்முறையாளர்கள் தோற்றிருப்பார்கள்...
நாட்டில் வன்முறையை தூண்டியவர்கள், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவாக்கிய இந்த நாட்டில் தோல்வியையே கண்டுள்ளனர்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.