வாஜ்பாய்- அத்வானி- மகாஜன் கலந்த கலவை தான் மோடி... அமர் சிங் திடீர் புகழாரம்
டெல்லி: வாஜ்பாய், அத்வானி என பாஜக தலைவர்களின் கூட்டுக் கலவையே மோடி என புகழ்ந்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் வேட்பாளர் அமர்சிங்.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நேற்று கடைசி கட்டத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து பல செய்தி நிறுவனங்கள் எக்ஸிட் போல் வெளியிட்டன. அதன்படி, பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி, மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் ஆகியோரின் கூட்டுக் கலவையே பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என வர்ணித்துள்ளார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் வேட்பாளர் அமர் சிங்.
மேலும், லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.