மோடி நல்ல பேச்சாளரும் அல்ல.. அவர் பேச்சை கேட்க யாரும் போவதும் இல்லை..: உமாபாரதி தாக்கு!
ஜான்சி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் அல்ல.. அவரது பேச்சை கேட்பதற்காக என யாரும் கூட்டத்துக்கு செல்லவில்லை.. அவருக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே செல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் ஜான்சி தொகுதி வேட்பாளருமான உமாபாரதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் போட்டியிடுகிறார் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான உமாபாரதி. ஜான்சி தொகுதியில் பாஜக தொண்டர்களிடையே நேற்று உமாபாரதி பேசியதாவது:
நீங்கள் யாராவது மோடியின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா? நமது கட்சியிலேயே அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே நல்ல பிரசார பேச்சாளர். அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை.
நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.. மோடி ஒரு நல்ல பேச்சாளர் அல்ல.. அவரது பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் கூடுவதாக நிறைய பேர் தவறாக எண்ணுகின்றனர்.. உண்மையில் எதற்காக அவ்வளவு கூட்டம் கூடுகிறது தெரியுமா?
மோடிக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமேதான் அவ்வளவு கூட்டமும் செல்கிறதே தவிர அவருடைய பேச்சை கேட்பதற்காக அல்ல..
இவ்வாறு உமாபாரதி பேசினார்.
உமாபாரதியின் இந்த பேச்சு பாஜகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உமாபாரதியோ தாம் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.. மோடி ஒரு நல்ல பிரசார பேச்சாளர் இல்லைதான் என்று திரும்பவும் கூறியுள்ளார்.