அஜீத் குமார் தோவல்... மோடியின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்.. பெரிய பெரிய இலக்குகளுடன்!
டெல்லி: அஜீத் குமார் தோவல்.. வயது 69. இவர்தான் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேறகப் போகிறவர்.
பெரிய பெரிய இலக்குகளுடன், தனது பணியை இவர் தொடங்கவிருக்கிறார். அதிகாரப்பூர்வமாக பணிக்கு வருவதற்கு முன்பே இவர் தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.
பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பதற்கு முன்பே ஷெரீப்புடன் மோடி பேசவுள்ள விஷயங்கள் குறித்த குறிப்பை தோவல்தான் முழுமையாகப் படித்து ஓகே செய்தாராம்.
முன்னாள் ஐபி தலைவர்
மத்திய உளவுப் பிரிவு அதாவது ஐபியின முன்னாள் தலைவர்தான் தோவல். கடந்த வாரத்தில் இவரும், மோடியின் முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ராவும் இணைந்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இருவரும் சேர்ந்துதான் சார்க் தலைவர்களிடம் மோடி என்ன விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும் என்பதை இறுதி செய்துள்ளனர்.
பாக். பேச்சு முக்கியமானது
இதில் பாகிஸ்தான் பிரமதருடன் மோடி பேசுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மிகுந்த கவனத்துடன் மோடிக்கு குறிப்புகளை தயாரித்துள்ளனர் இருவரும். தீவிரவாதப் பிரச்சினை அதில் முக்கியமானது.
கண்ணில் விரலை விட்டு ஆட்டக் கூடியவர்
தோவல், தீவிரவாதம் குறித்த விவகாரங்களில் மிகவும் கண்டிப்பு காட்டுபவராம். தீவிரவாதத்தில் அவர் சற்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டாராம். தோவலின் நியமனத்தின் மூலம் தீவிரவாதிகளுக்கு மோடி மறைமுகமாக கடும் எச்சரிக்கை
கொடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
மோடியின் முதல் நியமனமோ தோவல்தான்
பிரதமராக மோடி மேற்கொண்ட முதல் நியமனமே தோவல் நியமனம்தானாம். அந்த கோப்பில்தான் அவர் முதலில் கையெழுத்து போட்டாராம்.
3 முறை ஆலோசனை
மோடி பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பு 3 முறை தோவலுடன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தோவலிடம் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொண்டுள்ளாராம். அதன் பிறகே அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க தீர்மானித்தாராம் மோடி.
தீவிரவாத எதிர்ப்புக்கு முக்கியத்துவம்
இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்ட் எதிர்ப்புக் கொள்கையைப் பலப்படுத்தும் முக்கிய வேலையை தோவலிடம் ஒப்படைத்துள்ளாராம் மோடி.
2வது ஐபி அதிகாரி
இதற்கு முன்பு கடந்த மன்மோகன் சிங் அரசில் ஐபியிலிருந்து அதன் தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். தற்போது ஐபியிலிருந்து வந்துள்ள 2வது அதிகாரியாக தோவல் உருவெடுத்துள்ளார்.
முழுக்க முழுக்க ஐபிதான்
1968ம் ஆண்டு பாட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தோவல் தனது பணிக்காலத்தின் பெரும் பகுதியை ஐபியில்தான் கழித்துள்ளார் என்பது முக்கியமானது.
பல முக்கிய சம்பவங்களில் தொடர்பு...
மேலும் மியான்மர் -சீனா விவகாரம், மிஸோ தேசிய ராணுவத்திற்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைள், ஆபரேஷன் பிளாக் தண்டரில் பங்கேற்பு, பாகிஸ்தானில் ரகசிய புலனாய்வு நடவடிக்கைகள், தலிபான் தீவிரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்திய குழுவில் இடம் பெற்றது என முக்கியப் பணிகளில் தோவல் ஈடுபட்டவர் ஆவார்.
பாஜக நெருக்கம் இருந்தாலும்
பாஜகவுடன் நெருங்கியவராக தோவல் இருந்தாலும் கூட கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான் தோவலை ஐபி தலைவராக நியமித்தது. காரணம், அவரது பணி ஈடுபாடுதான்.
2005ல் ஓய்வு
ஐபி தலைவராக இருந்து 2005ம் ஆண்டில் ஓய்வு பெற்றவர் தோவல். தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உருவெடுத்துள்ளார்.