புத்தாண்டு சர்ப்பிரைஸ்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு டீ பார்ட்டி கொடுத்து அசத்திய மோடி!
டெல்லி: புத்தாண்டு தினத்தின்போது தனது அலுவலக ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் அலுவலக ஊழியர்களை சந்தித்து, அவர்களுடன் உற்சாகமாக பேசியுள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று மாலையில் தனது அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. உண்மையில் மோடி இப்படி ஒரு விருந்தளிப்பார் என எதிர்பார்க்காத ஊழியர்கள், இதில் சந்தோஷமாக கலந்து கொண்டனராம்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனராம். ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பஞ்சவதி ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோதும், இதேபோல புத்தாண்டு, குஜராத்தி புத்தாண்டு மற்றும் சிறப்பு விழாக்களின்போது தனது அலுவலக ஊழியர்களுக்கு தேநீர் விருந்து அளித்து கெளரவிப்பார். அதேபோல இந்த புத்தாண்டு தினத்துக்கும் அவர் பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் மோடி.
எப்போதுமே டீம் ஒர்க்கில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மோடி. தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் அமருவதற்காக ஒரு இருக்கை போடப்பட்டிருந்ததாம். வேறு இருக்கைகள் இடம் பெறவில்லை. இருப்பினும் பிரதமர் உட்காரவே இல்லையாம். கடைசி வரை நின்றபடியே ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம். மேலும், அனைவருடனும் சகஜமாக பேசி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தாராம்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தாராம்.
உங்கள் மனதில் இருப்பதை என்னிடம் கேட்கலாம். உங்களது கருத்துக்கள், கடந்த 7 மாத காலத்தில் எனது ஆட்சியில் நீங்கள் சந்தித்த அனுபவங்களை என்னிடம் தாராளமாக கூறலாம் என்று ஊழியர்களிடம் கூறினாராம் மோடி.
அப்போது வட கிழக்கு மாநிலங்களுக்கான பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், உங்களது வட கிழக்கு மாநில பயணம் அப்பகுதியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளதாக மகிழ்ச்சியோடு குறிப்பிட்டாராம். டிசம்பர் முதல் வாரத்தில் வட கிழக்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்திருந்தார் மோடி என்பது நினைவிருக்கலாம்.
பல ஊழியர்கள் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள், இவ்வளவு புத்துணர்ச்சியோடு இருக்கிறீர்களே, என்ன சாப்பிடுகிறீர்கள். உங்களது குர்தாவின் ரகசியம் என்ன என்றெல்லாம் கேட்டனராம். அனைத்துக் கேள்விகளுக்கும் தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்தாராம் மோடி.
ஒரு ஊழியர் நீங்க எப்பத்தான் ரெஸ்ட் எடுப்பீங்க என்று கேட்டாராம். பலர் யோகா தினம் குறித்து மோடியிடம் ஆர்வமாக கேட்டனராம். மேலும் எம்.பிக்கள் கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம் குறித்தும் பலர் கேள்வி கேட்டனராம்.
ஒருவர், எங்களை நாங்களே உத்வேகப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு குட்டிக் கதை ஒன்றை பதிலாக சொல்லியுள்ளார் மோடி.
இந்த உரையாடல்களுக்குப் பின்னர் டீ, காபி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை சுவைத்தனர் ஊழியர்கள். அவர்களுடன் மோடியும் டீ சாப்பிட்டாராம்.
மோடியின் இந்த புத்தாண்டு உரையாடல் பிரதமர் அலுவலக ஊழியர்களை வெகுவாக கவர்ந்து விட்டதாம். தங்களை பிரதமர் கெளரவப்படுத்தி விட்டதாக அவர்கள் மகிழ்ச்சியோடு கூறியுள்ளனர்.
இந்த உரையாடலின்போது ஊழியர்களுடன் தனித் தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் பிரதமர். இது பிரதமர் அலுவலக வரலாற்றிலேயே இதுவரை நடந்திராதது என்கிறார்கள்.
தகவல், படங்கள் நன்றி நிதி சென்ட்ரல்