குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.. பேளூர் மடத்தில் மோடி
கொல்கத்தா: குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என கொல்கத்தாவில் உள்ள பேளூர் மடத்தில் தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தா துறைமுகத்தில் 150ஆவது விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மம்தா பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஹவுரா நகர்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்திற்கு சென்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
அங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
இந்திய குடியுரிமை
இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவ்வாறு துன்பங்களால் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படுகிறது.
|
புரிய வைப்பது கடமை
சிலர் வேண்டுமென்றே இந்த சட்டத்தை புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். நாங்கள் ஒரே நாள் இரவில் எந்த சட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஏராளமான இளைஞர்கள் இந்த சட்டம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு புரிய வைப்பது நமது கடமை என்றார்.