மத்திய பட்ஜெட் 2015: மோடி புகழ்ச்சி… முழு மதிப்பெண் கொடுத்த ஜெட்லி சகோதரி- சோனியா இகழ்ச்சி
டெல்லி: மத்திய பட்ஜெட் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேசமயம் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து உள்ளார். இது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்.நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சக்தி தரும் பட்ஜெட்
நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிப் பொறிக்கு இந்த பட்ஜெட் தேவையான சக்தியை நல்கும். ஏழைகள், நடுத்தர மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிக்கு வித்திடும் புதிய திருப்புமுனைகள் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சரை பாராட்ட வேண்டும்.
நியாயமான வரிவிதிப்பு
பட்ஜெட்டில் விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பான அனைத்துச் சந்தேகங்களையும் கலையும் வகையில் பட்ஜெட் உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் இந்தியாவில் நிலையான, நியாயமான, யூகிக்கக்கூடிய வரிவிதிப்பே இருக்கிறது என்ற நம்பிக்கை
வரவேற்பு
முதலீட்டாளர்கள் மத்தியில் உதயமாகும். இந்த பட்ஜெட், முதலீட்டாளர்கள் வரவேற்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.இது அனைவருக்குமான பட்ஜெட் என மோடி தெரிவித்துள்ளார்.
பத்துக்கு பத்து
பட்ஜெட் சூப்பர் நான் முழு மதிப்பெண் கொடுக்கிறேன் என்று அருண்ஜெட்லியின் சகோதரி மது பார்கவா கூறியுள்ளார். லோக்சபாவில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து தனது தம்பி வாசித்த பட்ஜெட் உரையை பார்த்த மது, இது மிகவும் சிறப்பான பட்ஜெட் என்று தெரிவித்தார்.
அக்காமகள் பாராட்டு
இந்த பட்ஜெட் சிறப்பானது, முன்னேற்றம் மிக்க பட்ஜெட் என்று அருண்ஜெட்லியின் சகோதரியின் மகள் கூறியுள்ளார்.
ஒன்றுமில்லை
அதேசமயம் இந்த பட்ஜெட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார். பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.