தூதரை அனுப்பி வைத்தார் மோடி: காஷ்மீர் பிரிவினை தலைவர் கிலானி தகவல்! பாஜக மறுப்பு!!
ஸ்ரீநகர்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அனுப்பிய தூதர்கள் தம்மை சந்தித்தாக ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி கூறியுள்ளார். ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கிலானி கூறியதாவது:
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நரேந்திர மோடியின் தூதுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக ஒரு மென்மைப் போக்கை கடைபிடிக்கும் வகையில் பேசினர். ஆனால் இதை நான் நிராகரித்துவிட்டேன்.
அதே நேரத்தில் மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.. அதனால் அவரை நாங்கள் நம்புவதற்கில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டோம் என்றார்.
இப்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கிலானியின் பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்யக் கோருவதை பாஜக கைவிட்டுவிட்டதோ? பின்னர் ஏன் இந்த ரகசிய சந்திப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் கிலானி இப்படி சொல்லியிருப்பதை பாரதிய ஜனதா நிராகரித்துள்ளது. நரேந்திர மோடி சார்பில் எந்த ஒரு தூதரும் கிலானியை சந்திக்க அனுப்பி வைக்கப்படவில்லை. பாஜகவைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.. இதில் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்குமே இடமில்லை என்றார்.