மீண்டும் பிரதமர் பதவி.... ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்கிறார் மோடி?
நாக்பூர்: பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவை அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் வழிகாட்டி வருகிறது. மத்தியில் நடைபெறும் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை வழங்கி வந்தது.
ஆனால் அண்மைக்காலமாக மோடி மீது ஆர்.எஸ்.எஸ். தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றால் மோடிக்கு பதில் நிதின் கட்காரியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டும் வருகிறது.
கட்காரியை புறக்கணித்த மோடி
இதனை உணர்ந்துதான் நிதின் கட்காரி போட்டியிடும் நாக்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி செல்லவில்லை. இத்தனைக்கும் நாக்பூர் விமான நிலையத்தில் இறங்கித்தான் வார்தா பகுதிக்கு சென்றார் மோடி.
ஆர்.எஸ்.ஸ். கணக்கு
நிதின் கட்காரி போன்ற மிதவாதிகளை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தினால் மாநில கட்சிகள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்பது ஆர்.எஸ்.எஸ். கணக்கு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செல்லப் பிள்ளையாக இன்னமும் இருப்பவர் நிதின் கட்காரி. அதனால் அவருக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்திக்கிறார்
இந்நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளாராம் மோடி. நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு நாளை மறுநாள் மோடி செல்லக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
தமக்கே வாய்ப்பு
இச்சந்திப்பின் போது, பாஜக வெற்றி பெற்றால் தமக்கே பிரதமராக மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்கவும் மோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் பதவி ஏற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு தற்போதுதான் முதல் முறையாக மோடி செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.