68வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி!
டெல்லி: நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
நாடு முழுவதும் 68வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் இன்று காலை காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தலைப்பாகை அணிந்த உடையுடன் டெல்லி செங்கோட்டை வந்தடைந்தார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி உரையாற்றினார்.
வழக்கமாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல் குறிப்புகளை வைத்துக் கொண்டு உரையாற்றினார் மோடி. அதேபோல் புல்லட் புரூப் அணியாமலும் மோடி உரையாற்றினார்.
சுதந்திர தின விழாவையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
டெல்லி செங்கோட்டை வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றைய விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மற்றும் மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.