182 மீட்டர் உயரத்தில் சர்தார் பட்டேல் சிலை.. மோடி நாளை திறந்து வைக்கிறார்.. குஜராத்தில் விழாக்கோலம்
காந்திநகர்: சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
சுதந்திரமடைந்ததும் சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை இணைத்து ஒரே நாடாக கட்டி உருவாக்கி, இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். பட்டேலை கவுரவிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே உள்ள ஆற்று தீவான சாதுபேட்டில் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிடவும் இது உயரமானது. 2013ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோதே, இந்த சிலையை அமைக்க பணிகள் துவங்கின.
இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைக்கிறார். பல மாநில முதல்வர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஒற்றுமை சிலை என்று இது அழைக்கப்படும்.
[ராஜஸ்தானில் உருவாகும் 3வது அணி... பாஜக, காங்கிரஸ்க்கு பாதிப்பா?]
அக்டோபர் 31ம் தேதியான நாளைதான் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமாகும். இவ்வளவு செலவிட்டு சிலையை நிர்ணயிக்க வேண்டுமா என்ற பொது வெளி கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், டிவிகளில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.