பனிச்சரிவில் உயிரோடு மீண்ட ராணுவ வீரரை நேரில் சந்தித்த மோடி.. பரபரத்த டெல்லி மருத்துவமனை
டெல்லி: சியாசின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
பனிப்பாறைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 10 பேரும் மாயமானதாக கடந்த 3ம் தேதியன்று தகவல்கள் வெளியாகின. ராணுவத்தினர் 10 பேரும் வீர மரணம் அடைந்ததாக பின்னர் உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில், சடலங்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்த போது, மாயமான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை, ஆறு நாட்களுக்கு பின்னர் 25 அடி ஆழத்தில் பனியில் புதையுண்டிருந்த நிலையில் மீட்டனர்.
அதனையடுத்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஹனுமந்தப்பாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, ராணுவ தலைமை தளபதி தல்பிர் சிங் சுகாக் உடனிருந்தார். ஹனுமந்தப்பாவின் மன உறுதியை மோடி பாராட்டினார். பிரதமர் மோடியின் திடீர் வருகை, ஹனுமந்தப்பாவின் சக ராணுவ நண்பர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.