மோடி முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஆசம்கரில் போட்டியிட வேண்டியது தானே?: கபில் சிபல்
டெல்லி: முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள ஆசம்கரில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிட வேண்டியது தானே என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி எங்கு போட்டியிடுகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றால், அவர் ஏன் பாதுகாப்பான இடம் தேடுகிறார் போட்டியிட? முஸ்லீம்கள் தனக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று அவர் நம்பினால் ஆசம்கரில் போட்டியிட வேண்டியது தானே? என்று கேட்டுள்ளார்.
கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஆசம்கரில் முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஆசம்கரைச் சேர்ந்த முஸ்லீம்கள் பலர் தீவிரவாத தொடர்பு குறித்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.