மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக!
டெல்லி: அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு சாதனையைப் படைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சுரங்கப் பாதை மூலம் வீட்டிலிருந்து விமான நிலையம் போய் வரும் முதல் இந்தியப் பிரதமர் என்பதே அந்தப் புதிய சாதனை.
ஆம்.. மோடிக்காக ஒரு டன்னல் அதாவது ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறதாம்.
கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீ்ட்டர் தொலைவிலான இந்த சுரங்கப் பாதை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திலிருந்து சப்தர்ஜங் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறதாம்.
கமல் அட்டாதுர்க் மார்க் வழியாக
இந்த சுரங்கப் பாதையானது கமால் அட்டாதுர்க் மார்க், கோல்ப் கோர்ஸ், சப்தர்ஜங் டோம்ப் வழியாக செல்லுமாம்.
விமான நிலைய ஹெலிபேட் வரை
சப்தர்ஜங் விமான நிலையத்தின் ஹெலிகாப்டர் நிறுத்தும் பகுதி வரை இந்த சுரங்கப் பாதை செல்கிறதாம்.
ராஜீவ் காந்தி பவனுக்கு பின்புறம்
விமான நிலைய வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தி பவனுக்குப் பின்புறம் சுரங்கப் பாதை முடிந்து வெளியில் வரும் பாதை அமைக்கப்படுகிறது.
கண்ணுக்குத் தெரியாத வகையில்
வெளியிலிருந்து பார்ப்போருக்கு அது சுரங்கப் பாதை என்று தெரியாத வகையில் கட்டடங்களுடன் கட்டடமாக ரகசியமான முறையில் பாதுகாப்பான வகையில் கட்டப்படுகிறதாம்.
2 மாதத்தில் ரெடியாகும்
இன்னும் 2 மாதத்தில் இந்த சுரங்கப் பாதை ரெடியாகி விடுமாம். மோடிக்கான அவசர கால பாதையாக இது பயன்படுத்தப்படும். மேலும் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் இதை மோடி பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.
2010ம் ஆண்டிலேயே...
உண்மையில் இந்த சுரங்கப் பாதை மோடிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது அல்ல. 2010ம் ஆண்டிலேயே இதுகுறித்த விவாதங்களையும் திட்டங்களையும் ஐபி தொடங்கி விட்டதாம்.
பிரதமரின் எளிதான போக்குவரத்திற்காக
பாதுகாப்பு மட்டுமல்லாமல் பிரதமர், போகும்போதும் வரும்போதும் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறைப்பதற்காகவே இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறதாம்.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உதவியுடன்
சுரங்கப் பாதையை அமைக்கும் பணியில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் உதவியும் நாடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றனவாம். பணிகள் கிட்டத்தட்ட முடிந்து இறுதிக் கட்ட வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளனவாம்.
முக்கியமான விமான நிலையம்
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட விவிஐபிக்குள் சப்தர்ஜங் விமான நிலையத்தைத்தான் முக்கிய இணைப்புப் பகுதியாக பயன்படுத்துகின்றனர். இங்கிருந்துதான் அனைவரும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்கின்றனர் என்பதால் சுரங்கப் பாதையை இங்கு கொண்டு வந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் இது சகஜம்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அந்த நாட்டுத் தலைவர்களுக்கும் இதேபோல சுரங்கப் பாதைகள் நீண்ட காலமாகவே அமலில் உள்ளன. ஆனால் இந்தியாவில் இப்படி அமைப்பது இதுவே முதல் முறையாகும்.
மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து நாயக்கர் மஹால் வரை...
மதுரைக்குப் போனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இப்படி ஒரு சுரங்கப் பாதை இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அந்தக் காலத்தில் நாயக்க மன்னர்கள் தங்களது அரண்மனையிலிருந்து கோவிலுக்கு வருவதற்கு இந்த சுரங்கப் பாதையைத்தான் பயன்படுத்தினார்களாம்..
வரலாறு திரும்புகிறதோ....