அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்... சொல்கிறார் ராம் விலாஸ் பஸ்வான் !
ஜம்மு: அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தான் இருப்பார் எனவே காங்கிரஸ் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக இருப்பார். அதனால் காங்கிரஸ் கவலைப்படத் தேவையில்லை'.
நாட்டு மக்களின் ஆதரவு மோடிக்கு இருக்கிறது. அவருக்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது என்று கூறினார். சோனியா காந்தி குறித்தும், அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக ரேபரேலி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தை விமர்சித்து பேசினார். அப்போது அவர் நாட்டில் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, மோடி அரசு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. மோடி என்பவர் இந்தியாவின் பிரதமர்தான். இந்தியாவின் பேரரசர் அல்ல என்று கூறியிருந்தார்.