மோடி பங்கேற்ற விழாவில் சலசலப்பு.. பஞ்சாயத்து தலைவியை இழுத்துச் சென்ற அதிகாரிகள்
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் சலசலப்பை ஏற்படுத்த முயற்ச்சி செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற மகளிர் தின விழாவில், சலசலப்பை ஏற்படுத்த முயன்ற பெண் பஞ்சாயத்து தலைவரை அதிகாரிகள் இழுத்துச் சென்று வெளியேற்றினர்
மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் பெண் பஞ்சாயத்து தலைவர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் திடீரென எழுந்து, ஏதோ பேசியபடி விறுவிறுவென மேடையை நோக்கிச் சென்றார். ஆனால், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அந்தப் பெண், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி என்பதும், கவுதம புத்தர் நகர் பஞ்சாயத்து தலைவர் என்பதும் தெரியவந்தது. மாநில அரசு தனக்கு எந்த உதவியும் செய்யாத நிலையில், தான் சந்திக்கும் சிரமங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்க விரும்பியதாக ஷாலினி கூறினார்.