குஜராத் படுகொலை வழக்கு: மாயா கோட்னானிக்கு ஆதரவாக செப்.18-ல் சாட்சியம் அளிக்க அமித்ஷாவுக்கு சம்மன்
குஜராத் படுகொலை வழக்கில் மாயா கோட்னானிக்கு ஆதரவாக செப்டம்பர் 18-ல் அமித்ஷா சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் வன்முறைகளில் மிக கொடூரமான நரோடா காம் படுகொலை வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு ஆதரவாக வரும் 18-ந் தேதியன்று அமித்ஷா சாட்சியம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளில் நரோடா பாட்டியா, நரோடா காம் படுகொலைகள் உச்சகட்ட கொடூரமானது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நரோடா காமில் 11 முஸ்லிம்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
நரோடா பாட்டியா வழக்கில் மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் மாயா கோட்னானி.
மருத்துவமனையில்..
நரோடா காம் வழக்கில் மாயா கோட்னானி உட்பட 82 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த படுகொலையின் போது தாம் அகமதாபாத் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக மாயா கோட்னானி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அமித்ஷா சாட்சி
இதற்கு ஆதரவாக சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். அத்துடன் தாம் மருத்துவம் பார்த்ததற்கு தற்போது பாஜக தலைவராக உள்ள அமித்ஷாவும் சாட்சி எனவும் மாயா கோட்னானி கூறியிருந்தார். இதையடுத்து அமித்ஷாவை சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
18-ல் சாட்சியமளிக்க சம்மன்
ஆனால் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் அமித்ஷாவை சென்றடையவில்லை. இந்த நிலையில் வரும் 18-ந் தேதி அமித்ஷா சாட்சியம் அளிக்க நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இம்முறை சம்மனை பெற்றால் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ சாட்சியம் அளிக்க வாய்ப்பு உள்ளது.