நரசிம்மராவுக்குக் கிடைக்குமா பாரத ரத்னா?... ஆந்திராவிலிருந்து பரிந்துரை போனது!
ஹைதராபாத்: மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் பெயரை பாரத ரத்னா விருதுக்கு ஆந்திரா பரிந்துரைத்துள்ளது.
மேலும் சாய்னா நெஹ்வாலின் பயிற்சியாளரும், முன்னாள் பேட்மிண்டன் சாம்பியனுமான புல்லேலா கோபிசந்த்தின் பெயரை பத்மபூஷனுக்குப் பரிந்துரைத்துள்ளது ஆந்திர அரசு.
அதேபோல 16க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு பத்மஸ்ரீ விருது தர வேண்டும் என்றும் ஆந்திராவிலிருந்து பரிந்துரை போயுள்ளது.
மன்மோகன் சிங்கின் முன்னோடி
மன்மோகன் சிங்குக்கு முன்னோடி என்று நரசிம்மராவைக் கூறலாம். அதாவது அதிகம் பேசாதவர். ஆனால் அவரைப் பற்றித்தான் அத்தனை பேரும் அப்போது பேசிக் கொண்டிருந்தார்கள்.
காந்தி குடும்பத்தைச் சேராத முதல் காங். பிரதமர்
நேரு- இந்திரா காந்தி காலத்துக்குப் பின்னர், அவரது குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
முழு பதவிக்காலத்தைக் கழித்தவர்
பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் முழுமையாக தனது பதவிக்காலத்தைக் கழித்து சாதனை படைத்தவரும் ராவ்தான்.
மூப்பனார் வெளியேறக் காரணமாக அமைந்தவர்
தமிழகத்தில் வலுவான காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் காங்கிரஸை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு அவரது பொறுமையை சோதித்தவரும் கூட.
விருது கிடைக்குமா?
2014ம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுக்கு நரசிம்ம ராவ் பெயரை ஆந்திரா பரிந்துரைத்துள்ளது. விருது கிடைக்குமா என்பது தெரியவில்லை.