ஜூலை 14ல் தொடங்குகிறது நாசிக் கும்பமேளா... கோலாகல ஏற்பாடுகள்...
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் பிரசித்தி பெற்ற கும்பமேளா வரும் 14ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு சாதுக்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால், நாசிக் மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த கும்பமேளாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் கலந்து கொண்டு கோதாவரி ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். இதனையொட்டி கடந்த இரண்டு மாதகாலமாக 15000த்திற்கும் மேற்பட்டவர்கள் கோதவரி ஆற்றினை சுத்தம் செய்துள்ளனர். கோடிக்கணக்கான சாதுக்கள் குவியும் நாசிக், திரிம்பகேஷ்வர் நகரங்கள் தூய்மைபடுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் அலகாபாத் (உத்தரபிரதேசம்), ஹரித்துவார் (உத்தரகாண்ட்), நாசிக் (மகாராஷ்டிரம்) மற்றும் உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்) ஆகிய பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நாசிக்கில் 2003ம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு நாசிக்கில் இந்த ஆண்டு வருகிற 14ம் தேதி கும்பமேளா தொடங்குகிறது. அன்று காலை 6.16 மணிக்கு கொடியேற்றத்துடன் கும்பமேளா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. நாசிக் கும்பமேளா நிகழ்ச்சி ஏறத்தாழ 75 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 25ந் தேதி கும்பமேளா நிறைவு பெறுகிறது.
ஜூலை 12ல் கும்பமேளா
நாசிக்கில் இருந்து, 28 கி.மீ தொலைவில் உள்ள, திரிம்பகேஷ்வர் சிவன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில், கடந்த முறை, 3 கோடி பேர் பங்கேற்றனர். வரும், ஜூலை, 14 தொடங்கி செப்டம்பர் 25 வரை நடைபெறும் நாசிக் கும்பமேளாவில் இந்த முறை, 8 கோடி பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புனித நதி கோதாவரி
இந்த கோவிலில் உள்ள குண்டம் எனப்படும் புனித குளத்திலிருந்து தான், கோதாவரி நதி உற்பத்தியாகிறது. நாட்டின் மிக நீளமான நதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புனித குளத்தில் நீராடி, சிவனை வணங்குவது தான், திரிம்பகேஷ்வர் கும்பமேளா நிகழ்ச்சி.
நாணயங்களை சேகரிக்க
முதலில், ராம்குண்ட் என்ற இடத்தில் சாதுக்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவர். பின்னர் அவர்கள் ஆற்றில் எறியும் வெண்கல நாணயங்களை எடுக்க பக்தர்கள் கூட்டம் முட்டி மோதுவது உண்டு. சாதுக்களால் வழங்கப்படும் அந்த நாணயங்களில் அரிய சக்திகள் இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
குவியும் சாதுக்கள்
ஜூலை 14ம் தேதி தொடங்கும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நேபாளம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இப்போதே சாதுக்கள், சாமியார்கள், பல்வேறு மடாதிபதிகளும் நாசிக் நகருக்கு படையெடுத்து வர தொடங்கி விட்டனர்.
மராட்டிய அரசு
கும்பமேளாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் புனித தலமான திரிம்பகேஷ்வர், நாசிக் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மராட்டிய அரசு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே மேம்பாட்டு பணிகளை தொடங்கியது. நாசிக்கின் வெளிப்புற பகுதிகளில் ‘பார்க்கிங்' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் நிறுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
சாதுக்கள் தங்குமிடங்கள்
சாதுக்கள் தங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே ‘சாதுகிராம்' எனப்படும் தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், நாசிக் மாநகர் இப்போதே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பெரும்பாலான சாதுக்கள் திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்தும், மரத்தடி நிழலிலும் தங்கி உள்ளனர்.
பக்தர்களுக்கு மருத்துவ வசதி
கும்பமேளாவையொட்டி கோதாவரி ஆற்றுக்கு புனித நீராட செல்லும் வயதான, நோய்வாய்ப்பட்ட பக்தர்களுக்கு உதவியாக ஆங்காங்கே தங்குமிடங்களை போலீஸார் தற்காலிகமாக ஏற்படுத்தி உள்ளனர். அங்கு அவர்களுக்கு கழிவறை வசதி, குடிநீர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
குடிநீர் தொட்டிகள்
சாதுகிராம் பகுதியில் 80 தண்ணீர் தொட்டிகளும், ஷாகி ஸ்னான் பகுதியில் 15 முதல் 20 தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த தண்ணீர் தொட்டிகள் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்டவை என்று நாசிக் மாநகராட்சி நிர்வாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்படையினர் தயார்
கங்கை நதியின் 38 படித்துறைகளிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்களும், மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாசிக் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
நாசிக் நகரிலும், கும்பமேளா நடைபெறும் திரிம்பகேஷ்வர் சிவன் கோவில் வளாகத்திலும், 550க்கும் மேற்பட்ட, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரூ. 2500 கோடி பட்ஜெட்
கும்பமேளாவிற்காக மராட்டிய மாநில அரசு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப்பெரிய புனித திருவிழாவிற்கு தயாராகி வருகிறது நாசிக்.