நெருங்கும் 50வது நாள்.. கடுப்பில் மக்கள்... 500 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை முடுக்கிய ரிசர்வ் வங்கி!
பிரதமர் அறிவித்த 50 நாள் கெடு நெருங்கி வரும் நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை திடீரென அதிகரித்துள்ளது ரிசர்வ் வங்கி.
டெல்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தபோது பிரதமர் மோடி, 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பும், அதுவரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். தற்போது அந்த 50 நாள் கெடு முடியப் போகிறது. ஆனால் இதுவரை நிலைமை சரியாகவில்லை. மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியே வருகின்றனர். இந்த நிலையில் இத்தனை நாட்களாக மெத்தனமாக இருந்து விட்டு தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணியை விரைவுபடுத்தியுள்ளதாம் ரிசர்வ் வங்கி.
இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவுக்கு மக்களுக்குக் கொடுக்கப்படாத காரணத்தால்தான் மிகப் பெரிய அளவில் அவதிகளை சந்திக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த நோட்டை வெளியிடாமல் யாருக்குமே உபயோகப்படாத பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டதே மக்களை பெரும் சிக்கலுக்கு கொண்டு போய் விட்டது.
இந்த நிலையில் மக்களுக்கு பிரதமர் விதித்த கெடு முடியும் தருவாயில் இப்போது போய் 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி முடுக்கி விட்டுள்ளதாம். அதாவது 3 மடங்காக புதிய நோட்டுக்கள் அச்சிடுவதை அதிகரித்துள்ளனராம். தினசரி 1 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறதாம்.
சில்லறைப் பிரச்சினை
500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்த மத்திய அரசு புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. ஆனால் இதனால் மக்களுக்கு அவதிகளே கூடியதே தவிர நிவாரணம் கிடைக்கவில்லை. காரணம், பெருமளவில் சில்லறைப் பிரச்சினையும், 100 ரூபாய்க்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டதே. புதிய 2000 ரூபாய் நோட்டு மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. மாறாக, தேவையில்லாத தலைவலியாகவே இருந்தது.
அச்சிடுவது அதிகரிப்பு
இத்தனை நாட்களாக இதுகுறித்து லபோ திபோ என்று அத்தனை பேரும் கத்தியும் கூட என்னென்னவோ சால்ஜாப்பு சொல்லி வந்தார்களே தவிர புதிய 500 ரூபாய் நோட்டுக்களை நாடு முழுவதும் சரளமாகக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் போதிய அளவில் அது அச்சடிக்கப்படாததே. ஆனால் தற்போது அதை அதிகரித்துள்ளதாம் ரிசர்வ் வங்கி.
நாசிக் அச்சகத்தில்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில்தான் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. அங்குதான் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. தற்போது அங்கு தினசரி 1 கோடி ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. அதாவது வழக்கத்தை விட 3 மடங்கு அச்சிடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர 20, 50, 100 ரூபாய் நோட்டுக்களும் இங்கு அச்சிடப்படுகின்றனராம்.
அதிகரிக்கும் 500
பிரதமர் அறிவித்த 50 நாள் கெடு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போதுதான் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அனுப்ப ஆரம்பித்துள்ளனராம். நாசிக் அச்சகம், ஜனவரி 31ம் தேதிக்குள் 80 கோடி எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் என்றும், இவற்றில் பாதி எண்ணிக்கையிலானவை ரூ.500 நோட்டுகளாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதை முதலிலேயே செய்தியிருந்தால் இந்த அளவுக்கு அக்கப்போரையும், அவதியையும் மக்கள் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்காது.