ஆய்வாளர் பெரியபாண்டியனை பின்னால் இருந்து சுட்டனர்.. நாதுராமின் மனைவி வாக்குமூலம்
ஆய்வாளர் பெரியபாண்டியன் சுடப்பட்டது குறித்து கொள்ளையன் நாதுராமின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
ஜோத்பூர் : ராஜஸ்தானில் நகைக்கடை திருட்டு தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு, ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை போலீஸார் ஆய்வாளர் பெரிய பாண்டியன் தலைமையில் ராஜஸ்தான் சென்றனர். கடந்த டிசம்பர் 13ம் தேதி பதுங்கி இருந்த கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற போது, நடந்த சண்டையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜஸ்தான் போலீஸாரும், தமிழக போலீஸாரோடு இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திடுக்கிடும் வாக்குமூலம்
இந்நிலையில், கொள்ளையன் நாதுராமின் மனைவி மற்றும் முக்கிய கூட்டாளி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆய்வாளர் முனிசேகர் கொடுத்த தகவலின்படி, தப்பி ஓடும்போது கொள்ளையர்கள் சுட்டதால் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக முதலில் கூறப்பட்டாலும், தற்போது ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான நாதுராம் இன்னமும் தலைமறைவாக உள்ளான். இதனிடையே கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு ராஜஸ்தான் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருட்டில் யார் என்று தெரியவில்லை
அந்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த சுண்ணாம்பு சூளையில் நாங்கள் பதுங்கி இருந்த இரவில் யாரோ வந்து கதவை தட்டினர். அங்கு இருந்த ஒருவர் வந்து எங்களிடம் நாதுராம் எங்கே என்று கேட்டார். அவரது குரல் மிரட்டல் தொனியில் இருந்ததால், நாங்கள் அவர் மேல் கற்களை வீசிவிட்டு தப்பிக்க பார்த்தோம். அப்போது சிறிது தூரத்தில் அவரின் பின்னால் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனே அவர் சுருண்டு விழுந்தார். நாங்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டோம். சுட்டது யார், எங்களிடம் பேசியது யார் என்று எங்களுக்கு எதுவும் அப்போது தெரியாது என்று தெரிவித்து உள்ளார்.
முன்பதிவு செய்யாத பெட்டியில்
மேலும் தமிழகத்தில் எப்படி கொள்ளையடிப்போம் என்பது குறித்தும் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். கொள்ளை அடித்து முடித்ததும் நாதுராம் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்கு எங்கு வரவேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்புவார். உடனே விமானத்தில் கிளம்பி சென்னை வந்து குறிப்பிட்ட இடத்தில் நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் ராஜஸ்தானுக்கு முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் ஏறி தான் சென்று விடுவது தான் வழக்கம் என்று தெரிவித்து உள்ளார்.
தனிப்படையிடம் விசாரனை
ஊரிலும், உறவினர்களிடமும் சென்னையில் வியாபாரம் செய்து வருவதாக சொல்லி வைத்து இருப்பதாகவும் மஞ்சு ராஜஸ்தான் போலீஸாரிடம் தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் சுட்டு தான் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணமடைந்து உள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளதை அடுத்து அவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால், முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனிசேகரின் துப்பாக்கி தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பட்டு உள்ளது.