ஜவஹர்லால் நேரு 127-வது பிறந்த தினம் நாடுமுழுவதும் கோலாகல கொண்டாட்டம்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 127-வது பிறந்த தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டெல்லி: ஜஹர்லால் நேருவின் 127-வது பிறந்த தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் நேருவிற்கு மரியாதை செலுத்தி உள்ளனர்.
டெல்லியில் அமைந்துள்ள நேருவின் நினைவிடத்துக்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் உள்ளிட்டோரும் நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் இசைக்கருவிகள் முழுங்க பள்ளிக் குழந்தைகளின் தேசப் பக்திப் பாடல்கள் இடம் பெற்றன. மேலும் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நேருவின் திருவுருப்படத்துக்கு மக்களவை சபாநாயகர், உள்துறை அமைச்சர், பிற அமைச்சர்கள், பாஜக தலைவர் அத்வாணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.