நாட்டின் மக்கள் தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு மோகன் பகவத் அட்வைஸ்
நாக்பூர்: நாட்டின் மக்கள் தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய பா.ஜ.க.அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
1925-ம் ஆண்டு நாக்பூரில் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஹெட்கேவர் தொடங்கினார். இதையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். நிறுவன நாள் கொண்டாடப்படும்.
இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு நாக்பூரில் அதன் தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் துணைத் தூதர் Kobbi Shoshani பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: நமது தேசத்தின் கலாசாரம் ஆழமாக பிளவுபட்டுவிடக் கூடாது. பிறந்த நாள்கள், பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.
இதே விஜயதசமி நாளில்..96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்...3 முறை தடை..கடந்து வந்த பாதை
தேசப்பிரிவினை சோக வரலாறு
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்ன நோக்கத்துக்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த பயணம் இன்னமும் முடிவடையவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்தை சீர்குலைக்கவே மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன. நாடு விடுதலை அடைந்த போது தேசப் பிரிவினை நிகழ்ந்தது மிகப் பெரிய சோக வரலாறு. இன்றைய இளைய தலைமுறை அந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
தேசவிரோத செயல்கள்
இன்று OTT எனப்படும் சினிமா வெளியீட்டு தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கின்றன. கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் குழந்தைகளின் கைகளில் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளன. போதைப் பொருட்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இவற்றை எல்லாம் எப்படி தடுக்கப் போகிறோம்? இத்தகைய வர்த்தகத்தின் மூலமான பணம் தேசவிரோத செயல்களுக்குதான் பயன்படுகிறது. இதனை கட்டுப்படுத்தியாக வேண்டும்.
மக்கள் தொகை கொள்கை
நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். புதிய மக்கள் தொகை கொள்கையானது அடுத்த 50 ஆண்டுகாலத்துக்கானதாக இருக்க வேண்டும். அந்த கொள்கையை அனைவருக்கும் சமமானதாக செயல்படுத்த வேண்டும். சமூகங்களிடையேயான மக்கள் தொகையில் நிலவும் ஏற்றத்தாழ்வு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது.
எல்லை பாதுகாப்பு வலுவாக்க வேண்டும்
நமக்கு தாலிபான்களின் வரலாறு தெரியும். இன்று சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களை ஆதரிக்கின்றன. ஒருவேளை தாலிபான்கள் நிலைப்பாடு கூட மாறலாம். ஆனால் இந்தியா தொடர்பான சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடுகள் மாறுமா? ஆகையால் நமது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.