தேசிய மகளிர் ஆணையத்துக்கு கைது செய்யும் அதிகாரம்: சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
டெல்லி: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களை மகளிர் ஆணையம் பெற வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரையும், மேற்படி புகார்களின் பேரில் விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பவர்களையும் கைது செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது.
மகளிருக்கு எதிரான குற்றங்கள்
மகளிருக்கு எதிரான குற்றங்கள், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான வழிமுறைகள் ஆகியவற்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் இந்த ஆணையத்துக்கு சர்வதேச நாடுகளில் மகளிர் ஆணையங்களுக்கு உள்ளதைப் போல் அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்தது.
கைது செய்யும் அதிகாரம்
இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய இரு வேறு குழுக்களை நியமிக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரையும், மேற்படி புகார்களின் பேரில் விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பவர்களையும் கைது செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட சில பரிந்துரைகளை இந்த ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தது.
சட்ட அமைச்சகம் மறுப்பு
இந்த இரண்டுக்குமே மத்திய சட்ட அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நபரை கைது செய்வது மற்றும் அபராதம் விதிப்பது என்பது சட்டம் மற்றும் நீதித்துறையின் முக்கிய அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் இந்த அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்குவதை மத்திய சட்ட அமைச்சகம் விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.