குடியரசு தலைவர்தான் விருது வழங்க வேண்டும்.. தேசிய விருது பெற வந்தவர்கள் போராட்டம்.. பரபரப்பு
65 ஆண்டு கால நடை முறைபடி குடியரசு தலைவர் தான் தேசிய விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய விருது பெற வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லி: 65 ஆண்டு கால நடை முறைபடி குடியரசு தலைவர் தான் தேசிய விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய விருது பெற வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மற்றவர்களுக்கு ஸ்மிருதி இரானி
அதாவது தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கம். இன்று நடைபெறும் விழாவில் குறிப்பிட்ட 11 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
கலைஞர்கள் அதிர்ச்சி
இந்த தகவலால் விருது பெறுபவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாக 60 க்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ளனர்.
புறக்கணிப்பதாக அறிவிப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிலருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
64 ஆண்டுகால நடைமுறை
இந்நிலையில் தேசிய விருது பெற வந்த திரைக் கலைஞர்கள் டெல்லி அசோகா ஹோட்டலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 64 ஆண்டுகால நடைமுறைபடி குடியரசுத் தலைவரே வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும் பரபரப்பு
ஸ்மிருதி இரானியிடம் இருந்து தேசிய விருது பெற விருப்பமில்லை என்றும் விருது பெறுபவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மாலை தேசிய விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில் இந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருக்கைகள் நீக்கம்
இதனிடையே தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்காததால் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கி வருகிறார். இதில் பங்கேற்காத திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.