மத்திய பல்கலைகளில் இனி “தேசியக் கொடி” பறக்கும்- முதல் கொடி ஜேஎன்யூவில் பறக்க விடப்படும்
டெல்லி: மத்திய பல்கலைகளில் மாணவர்களிடையே தேசப்பற்றினை ஏற்படுத்தும் வகையில் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விடுவது என்று மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. அதன்படி, முதல் தேசிய கொடி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட இருக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நடந்த 46 மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து மாணவர் தலைவர் கன்யா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த மாதம் ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எனவே மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.