தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
டெல்லி: விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஏற்கெனவே 40 நாள்களாக கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினர். தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நடவடிக்கை எடுப்பதாகவு்ம உறுதி அளித்தனர்.
அதன் பேரில் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் தமிழகத்துக்கு வந்துசேர்ந்தனர். பின்னர் சில நாள்கள் கழித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 82 நாள்களாக நீடித்து வருகிறது.
ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், ஒலிமாசுவும் ஏற்படுவதால் அங்கு போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டங்களை நடத்த தடை விதித்தார்.
மேலும் கூடாரங்கள், ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது.