ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!
Recommended Video
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் நேற்று காரசார விவாதம் நடைபெற்றது. முன்னதாக தமிழக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கேட்டது.
ஆனால் பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்ப்பித்தது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு மாநிலத்தை சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஸ்டெர்லைட் எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று கூறியதோடு தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.