தூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கையளிக்க அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
டெல்லி: தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கையளிக்க அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தேவையான நிபுணர்கள் குழு தமிழக அரசிடம் இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
மேலும் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முறையாக பராமரிக்கவில்லை எனில் பாதிப்பு ஏற்படும். ஆலையில் உள்ள கருவிகளை பராமரிக்க மின்சார இணைப்பு தர வேண்டும். ஒரே இரவில் மின் இணைப்பை துண்டித்தது தவறு என ஸ்டெர்லைட் ஆலை வாதிட்டது.
இதைத்தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க திறமையான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஆய்வு செய்து அமிலங்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டதை மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உறுதி செய்துள்ளன என தெரிவித்தது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்க அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கையளிக்க தமிழக அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால் தமிழக அரசு கேட்ட அவகாச கோரிக்கயை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.