தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வெப்சைட் முடக்கம்.. மர்மநபர்கள் கைவரிசை !
டெல்லி: தேசிய பசுமை தீர்பாயத்தின் இணையதளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன் சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது. இந்நிலையில், அதற்கு பழிவாங்குவதாக கூறி, இன்று மர்ம நபர்கள் சிலர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தை முடக்கியுள்ளனர். இணையதளத்தின் முதல் பக்கம் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் அவதூறு கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர்.
'நீங்கள் காஷ்மீரில் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள். அதை 'துல்லியமான தாக்குதல்' என்று சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கு பதிலடியாக எங்கள் இணையதள போரின் பலனை அனுபவியுங்கள். எங்களை முறியடிக்க முடியாது' என்று அதில் கூறியுள்ளனர். இந்த இணையதளத்தை முடக்கியது இரவு 7.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி பசுமை தீர்ப்பாயம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.