வெளிநாடு, உள்நாடு விவகாரங்களுக்கு தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்- மோடி ஆலோசனை!
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வெளிவிவகார பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்க பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் தோவால் பணியாற்றி வருகிறார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் 1968-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் இவர், வெளியுறவு, உள்துறை அமைச்சகங்களின் செயலர்களுடன் இனைந்து வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்து வருகிறார்.
உள்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பது, மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை, அஸ்ஸாம், நாகலாந்து உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் பிரதமருக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் பணி இவருடையது.
மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக பல நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதன் காரணமாக தோவாலுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கருதுகிறார். எனவே இந்த பதவியை வெளியுறவு பாதுகாப்பு , உள்நாட்டு பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளாக பிரித்து தனித்தனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை நியமிக்க மோடி பரிசீலித்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் தோவாலுக்கு முதல்நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும், புதிதாக பொறுப்பேற்பவருக்கு இரண்டாம் நிலை பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்தும் வழங்க பிரதமருக்கு அதிகாரிகள் யோசனைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.